கடந்த 2014 மக்களவைத் தேர்தலையடுத்து உத்தரப்பிரதேச மாநிலம் வாராணசி தொகுதியில் 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலிலும் தொடர்ந்து 2-ஆவது முறையாக பிரதமர் நரேந்திர மோடி போட்டியிடுகிறார்.
இந்நிலையில், வாராணசி மக்களவைத் தொகுதியில் பிரதமர் மோடி ஏப்ரல் 26-ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏப்ரல் 25-ஆம் தேதி பணாரஸ் ஹிந்து பல்கலைக்கழகம் முதல் தஸாஸ்வமேத் கட் வரை சாலை மார்கமாக நடைப் பிரசாரம் மேற்கொள்கிறார்.
பின்னர் கால பைரவர் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு, மாலை கங்கை ஆரத்தியில் பங்கேற்று வழிபாடு நடத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் அன்றைய தினம் கட்சியினருடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபடவுள்ளார்.
இதையடுத்து வேட்புமனு தாக்கல் அன்று காசி விஸ்வநாதர் கோயிலில் சிறப்பு வழிபாடு மேற்கொள்ளவுள்ளார். பின்னர் அங்கிருந்து சாலை மார்கமாக சென்று மனு தாக்கல் செய்கிறார். அப்போது ஊடகத்தினரை சந்திக்க வாய்ப்புள்ளதாக கூடுதல் தகவல்கள் கசிந்துள்ளன.
முன்னதாக, 2014 மக்களவைத் தேர்தலின்போது குஜராத் மாநிலத்தின் வதோத்ரா மற்றும் உத்தரப்பிரதேச மாநிலத்தின் வாராணசி ஆகிய இரு தொகுதிகளில் நரேந்திர மோடி போட்டியிட்டு வெற்றிபெற்றார். அதிலும் வாராணசி தொகுதியில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஆம்ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கேஜரிவாலை 3.37 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றிகண்டார். இதையடுத்து வதோத்ரா தொகுதியை ராஜிநாமா செய்தார்.
இந்நிலையில், பிரதமர் மோடியை எதிர்த்து காங்கிரஸ் தரப்பில் உத்தரப்பிரதேச மாநில செயலாளர்களில் ஒருவரும், ராகுலின் சகோதரியுமான பிரியங்கா வதேரா போட்டியிடவுள்ளதாக கூறப்படுகிறது. 7 கட்டங்களாக நடைபெறும் 2019 மக்களவைத் தேர்தலில் மே 19-ஆம் தேதி வாராணசியில் தேர்தல் நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 23-ஆம் தேதி நடைபெறுகிறது.