பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி அமைத்ததற்கான விளைவை சமாஜவாதி எதிர்கொள்ளும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
உத்தரப் பிரதேச மாநிலம், பதாவன் நகரில் தாடாகஞ்ச் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மக்களவைத் தேர்தல் பிரசாரத்தில் அவர் பேசியதாவது:
பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி வைத்தது எவ்வளவு பெரிய தவறு என்பது சமாஜவாதிக்குத் தெரியவில்லை.
இதனால், அதிக பாதிப்பை அந்தக் கட்சி எதிர்கொள்ளும்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில் பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அதைத் தொடர்ந்து 13 நாள்களுக்கு பிறகு, இந்திய விமானப் படை பாலாகோட்டில் பதிலடி தாக்குதல் நடத்தியது.
ஆனால், இந்தத் தாக்குதலில் எத்தனை பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என்பதற்கான ஆதாரங்களை காட்டுமாறு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கேட்கின்றன.
ஒன்றா, இரண்டா நாங்கள் எப்படி எண்ணிக் கொண்டிருப்பது?
மிக அதிக எண்ணிக்கையிலான பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. எத்தனை உயிர்கள் கொல்லப்பட்டனர் என்பதை எண்ணுவது இந்திய விமானப் படையின் பணி அல்ல.
பாதுகாப்புப் படையினருக்கு தேவையான உபகரணங்களை மத்திய அரசு வாங்கித் தந்துள்ளது.
கடந்த 2009ஆம் ஆண்டிலிருந்து குண்டு துளைக்காத உடைகளை கொள்முதல் செய்யுமாறு வீரர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த விவகாரம், பிரதமர் மோடியின் கவனத்துக்குச் சென்றதும், குண்டு துளைக்காத உடைகளை வாங்குவதற்கு அவர் உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து, 1.86 லட்சம் ராணுவ வீரர்களுக்கு குண்டு துளைக்காத பாதுகாப்பு உடைகள் வாங்கித் தரப்பட்டன என்று ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
உத்தரப் பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சி 38 இடங்களிலும், சமாஜவாதி 37 இடங்களிலும் போட்டியிடுகிறது.