மதுரை: பணப்பட்டுவாடா நடப்பதால் மதுரையில் தேர்தலை ரத்து செய்யக் கோரிய வழக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.
பணப்பட்டுவாடாவை தடுக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாக தேர்தல் ஆணையம் அளித்த விளக்கத்தை ஏற்று மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்.
மதுரை மக்களவைத் தொகுதி தேர்தலை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
மதுரை மக்களவைத் தொகுதி சுயேச்சை வேட்பாளர் கே.கே.ரமேஷ் தாக்கல் செய்த மனு: கடந்த மார்ச் 31-ஆம் தேதி மதுரையில் அதிமுக தரப்பில் செளராஷ்டிரா கிளப்பில் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்திற்கு செளராஷ்டிரா சமுதாயத்தைச் சேர்ந்த சுமார் 4,000 பேர் தனியார் வாகனத்தில் அழைத்து வரப்பட்டனர். அதில் ஒவ்வொருக்கும் ரூ.500 மற்றும் பிரியாணி, இனிப்பு பெட்டிகள் வழங்கப்பட்டன.
இதுமட்டுமின்றி திமுகவினரும் இதேபோல் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருள்கள் வழங்குகின்றனர். இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.
இதுபோன்று தேர்தல் நேரத்தில் வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பரிசுப் பொருள்கள் கொடுப்பது ஜனநாயகத்திற்கு விரோதமானது. எனவே மதுரை மக்களவைத் தொகுதி தேர்தலை ரத்து செய்ய வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி, தேர்தல் ஆணையத்தின் விளக்கத்தை ஏற்றுக் கொண்டு மனுவை தள்ளுபடி செய்வதாக அறிவித்தனர்.