2019 ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் தமிழக வீரர்கள் தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர் இடம் பெற்றுள்ளனர்.
இங்கிலாந்தில் வரும் மே மாதம் 30-ஆம் தேதி உலகக் கோப்பை போட்டி தொடங்குகிறது. இதற்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ தேர்வுக் குழு திங்கள்கிழமை அறிவித்தது.
கோலி தலைமையிலான அணியில் தமிழக விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக், ஆல்ரவுண்டர் விஜய் சங்கர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
தோனிக்கு அடுத்து இரண்டாவது விக்கெட் கீப்பர் இடத்துக்கான பந்தயத்தில் ரிஷப் பந்தை பின்னுக்கு தள்ளி தினேஷ் கார்த்திக் இடம் பெற்றார். பெரிய போட்டி என்பதால், இளமைக்கு பதிலாக அனுபவத்துக்கு அணி நிர்வாகம் முன்னுரிமை வழங்கி தினேஷ் கார்த்திக்கை தேர்வு செய்தது.
அதே நேரத்தில் நியூஸிலாந்து தொடரில் சிறப்பாக ஆடிய விஜய்சங்கரும் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் 4-ஆவது நிலை பேட்ஸ்மேனாக களமிறக்கப்படுவார் எனத் தெரிகிறது. மேலும் கூடுதல் வேகப்பந்து வீச்சாளராகவும் விஜய் சங்கர் பயன்படுத்தப்படுவார். நீண்ட நாள்களுக்கு பின் மீண்டும் தமிழக வீரர்கள் உலகக் கோப்பை அணியில் இடம் பெறுகின்றனர்.