மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தரப் பிரதேச மாநிலம் லக்னௌ நாடாளுமன்றத் தொகுதியில் இன்று (செவ்வாய்கிழமை) வேட்புமனுத் தாக்கல் செய்தார்.
17-ஆவது மக்களவைத் தேர்தலில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தரப் பிரதேச மாநிலம் லக்னௌவில் போட்டியிடுகிறார். அதற்கான வேட்புமனுவை தாக்கல் செய்வதற்காக அவர் உத்தரப் பிரதேசம் சென்றுள்ளார்.
வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கு முன் அவர் ஹனுமன் சேது கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தார். அதைத்தொடர்ந்து, ஹஸ்ரதங் சௌரஹாவில் உள்ள அம்மாநில பாஜக தலைமையகத்தில் கட்சி நிர்வாகிகள் மத்தியில் அவர் உரையாற்றினார்.
அதன்பிறகு, அந்த பகுதியின் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு சுமார் 6 கி.மீ. தூரம் திறந்தவெளி வாகன ஊர்வலத்தையும் ராஜ்நாத் சிங் மேற்கொண்டார். இதைத்தொடர்ந்தே, அவர் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.
லக்னௌ தொகுதியில் இருந்து அவர் 2-ஆவது முறையாக போட்டியிடுகிறார். கடந்த 2014-இல் லக்னௌ தொகுதியில் போட்டியிட்ட அவர் காங்கிரஸ் வேட்பாளர் ரீடா பகுகுணா ஜோஷியை தோற்கடித்து வெற்றி பெற்றார்.
லக்னௌ தொகுதியில் வாஜ்பாய் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறார். அதனால், பாஜக இதை முக்கியமான தொகுதியாக பார்க்கிறது.
லக்னௌ தொகுதியில் மே 6 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.