இந்திய மக்களவைத் தேர்தல் தொடங்கியதில் இருந்தே நாடு முழுவதும் பல்வேறு தொழில்கள் சுறுசுறுப்படைந்துள்ளது. இதில் ஹெலிகாப்டர்களையும், ஜெட் விமானங்களையும் வாடகைக்கு விடும் நிறுவனங்களும் அடங்கும்.
ஒவ்வொரு நாளும் இரண்டுக்கும் மேற்பட்ட மாநிலங்களில் பிரசாரம் செய்வதில் பாஜகவினரே முன்னுரிமை பெறுகிறார்கள். இதற்காக அவர்கள் 3 மாதங்களுக்கு முன்பே, முன்னணி நிறுவனங்களின் ஹெலிகாப்டர் மற்றும் ஜெட் விமானங்களை வாடகைக்கு முன்பதிவு செய்துள்ளனர். சுமார் 45 நாட்களுக்கு முன்பதிவு செய்துள்ளனர்.
தற்போதைய தேவைக்கு ஏற்ற அளவுக்கு இந்தியாவில் ஹெலிகாப்டர்கள் வாடகைக்கு இருப்பதில்லை. பாஜக தரப்பில் 20 தனியார் நிறுவனங்களின் ஜெட் விமானங்களும், 30 ஹெலிகாப்டர்களும் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டன. இதில் 5 சதவீத அளவுக்குக் கூட காங்கிரஸ் பயன்படுத்தவில்லை (இருந்தால்தானே?). சரி, இந்த ஹெலிகாப்டர்களுக்கான வாடகைத் தொகையை யார் செலுத்துகிறார்கள் என்பதும் இதுவரை ரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சிகளைப் பற்றி புகார் கூறுவதை மட்டுமே ஒரு கட்சி தனது பிரசாரத்தில் பயன்படுத்தாமல், அவர்களது பிரசாரத்தையே முடக்கும் செயல்களிலும் ஒரு கட்சி ஈடுபடுவது வழக்கம்தான். ஆனால், பாஜகவினர், காங்கிரஸ் கட்சியினரால் ஒரு ஹெலிகாப்டரைக் கூட பயன்படுத்த முடியாமல் முடக்கும் அளவுக்கு முன்கூட்டியே திட்டமிட்டிருப்பது ஆச்சரியத்தை அளித்துள்ளது.
சரி இதெல்லாம் அரசியல் விவகாரங்கள். தற்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது 45 நாட்களுக்கு ஜெட்களும், ஹெலிகாப்டர்களும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் வாடகை எவ்வளவு தெரியுமா? ஜெட் விமானங்களின் வாடகை ரூ.40 ஆயிரம். ஹெலிகாப்டர்களின் வாடகை ரூ.50 ஆயிரம். இது ஒரு மாதத்துக்கா என்று கேட்காதீர்கள். ஒரு மணி நேரத்துக்கு மட்டுமே.