தேர்தலில் இருமுறை மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்த மகாராஷ்டிர மாநில பாஜக எம்எல்ஏ மந்தா மாத்ரேவுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நவி மும்பையில் உள்ள பேலாபூர் தொகுதி பாஜக எம்எல்ஏவாக இருப்பவர் மந்தா மாத்ரே. நவி மும்பை அருகே நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் மந்தா மாத்ரே பேசியபோது, மும்பையில் வேலைபார்க்கும் சதாரா பகுதி மக்கள் முதலில் தங்களது சொந்த ஊருக்கு சென்று வாக்களிக்க வேண்டும், பிறகு திரும்பி வந்து வரும் 29ஆம் தேதி நடைபெறும் தேர்தலில் தாணே தொகுதி சிவசேனை வேட்பாளருக்கு 2ஆவதாக வாக்கை பதிவு செய்ய வேண்டும் என்றார்.
தேர்தலில் மக்கள் ஒருமுறை மட்டுமே தங்களது வாக்கைப் பதிவு செய்ய வேண்டும். 2ஆவதாக பதியும் வாக்கு, கள்ள வாக்காக கருதப்படும். அவர்கள் மீது இதற்காக நடவடிக்கை எடுக்கப்படும். இந்நிலையில், இருமுறை வாக்களிக்க வேண்டும் என பாஜக எம்எல்ஏ மந்தா மாத்ரே பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதைத்தொடர்ந்து, தேர்தல் நடத்தைகளை மீறிய குற்றச்சாட்டுகளின்கீழ், மந்தா மாத்ரேவுக்கு எதிராக தேர்தல் அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.