மேலும் ஒரு சிஏஜி துணைத் தலைவர் பதவியை ஏற்படுத்துவதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில், கூடுதலாக ஒரு சிஏஜி துணைத் தலைவர் பதவியை ஏற்படுத்துவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதுகுறித்து மத்திய அமைச்சரவை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
மத்திய கணக்கு தணிக்கை தலைமை அதிகாரி (சிஏஜி) அலுவலகத்தில், கூடுதலாக ஒரு சிஏஜி துணைத் தலைவர் பதவியை (ஒருங்கிணைப்பு, செய்தி மற்றும் தகவல் தொடர்பு அமைப்பு ) ஏற்படுத்துவதற்கு மத்திய அமைச்சரவை தனது ஒப்புதலை வழங்கியுள்ளது. மாநிலங்களின் கணக்குத் தணிக்கை, தொலைத் தொடர்பு துறை கணக்கு தணிக்கை உள்ளிட்ட ஒருங்கிணைப்பு பணியை அவர் மேற்பார்வையிடுவார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிஏஜி அலுவலகத்தில் தற்போதைய நிலவரப்படி, 5 துணைத் தலைவர்கள் உள்ளனர். மத்திய, மாநில அரசுகளின் கணக்கு விவகாரம், மத்திய வருவாய்த் துறை, பாதுகாப்பு மற்றும் ரயில்வே துறை, செய்தி மற்றும் தகவல் தொடர்பு துறைகளின் கணக்கு விவகாரங்களை தணிக்கை செய்யும் பணிகளை அவர்கள் செய்து வருகின்றனர்.