பயணச்சீட்டில் பிரதமர் நரேந்திர மோடியின் படத்தை அச்சிட்டு, அதைப் பயணிகளுக்கு வழங்கியது தொடர்பாக, ரயில்வே அதிகாரிகள் 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக, ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: உத்தரப் பிரதேசத்தின் பாராபங்கி ரயில் நிலையத்தில், பிரதமர் மோடியின் உருவப்படம் பொறித்த பயணச்சீட்டு, பயணிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக, அந்த ரயில் நிலையத்தின் தலைமை கண்காணிப்பாளர், வணிக ஆய்வாளர், உதவியாளர்கள் இருவர் ஆகியோரை லக்னெள பிரிவு ரயில்வே மேலாளர் பணியிடை நீக்கம் செய்துள்ளார் என்றனர்.
மத்தியில் ஆட்சியில் இருக்கும் கட்சியானது, அரசு சார்ந்த அலுவல்களில் தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவது, தேர்தல் நடத்தை விதிகளை மீறிய செயலாகும். ஏற்கெனவே, ரயில் பயணச்சீட்டுகளில் பிரதமர் மோடியின் படத்தை அச்சிட்டது, ரயிலில் பயணிகளுக்கு விற்கப்படும் தேநீர் குவளையில் நானும் காவலாளி' என்று அச்சிட்டு வழங்கியது போன்ற விவகாரங்களுக்காக ரயில்வேயை, தேர்தல் ஆணையம் கண்டித்திருந்தது நினைவுகூரத்தக்கது.