சென்னை ஆவடி அருகே பறிமுதல் செய்யப்பட்ட 1,381 கிலோ தங்கம் திருப்பதி தேவஸ்தானத்தைச் சேர்ந்தது தான் என்று தேவஸ்தான தலைவர் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழகத்தில் நாளை (வியாழன்) அன்று நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் வாகன சோதனைகள் தீவிரமாகத் தொடர்கிறது. அதேநேரத்தில் தேர்தல் பறக்கும் படையும் தனது கண்காணிப்பை மேற்கொள்கிறது.
இந்நிலையில் சென்னை ஆவடியை அடுத்த வேப்பம்பட்டு பகுதியில் நடைபெற்ற வாகன சோதனையில் 1381 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் பறக்கும் படை அதிகாரி செல்லபாண்டியன் தலைமையிலான அதிகாரிகள் திருவள்ளுர் நெடுஞ்சாலையில் வந்த இரண்டு வேன்களை நிறுத்தி சோதனை செய்தனர்.
அப்போது அவற்றில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்டதால் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவை 25 கிலோ எடை அளவில் மூட்டைகளாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இந்த தங்கமானது திருப்பதி தேவஸ்தானதிற்கு கொண்டு செல்லப்படுவதாக வேனில் இருந்தவர்கள் கூறியுள்ளனர்.
ஆனால் வேனில் எந்த விதமான பாதுகாப்பபு ஏற்பாடுகளோ அல்லது உரிய ஆவணங்களோ இல்லாத காரணத்தால், குறிப்பிட்ட வேனை பகுதி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வைத்து சோதனை நடத்தி, காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இந்நிலையில், பறிமுதல் செய்யப்பட்ட 1,381 கிலோ தங்கம் தேவஸ்தானத்தைச் சேர்ந்தது தான் என்று தேவஸ்தான தலைவர் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் திருப்பதி தேவஸ்தானம் கடந்த 2016-ஆம் ஆண்டு 1,311 கிலோ தங்கத்தை 3 ஆண்டு காலத்துக்கு 1.75 சதவீத வட்டியில் முதலீடு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.