கர்நாடகாவில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸ்-ஜேடிஎஸ் கூட்டணிக்கு மக்கள் மற்றும் நாட்டு நலனைவிட வாக்கு வங்கியே முக்கியம் என்று விமரிசித்தார்.
பிரதமர் மோடி இன்று (வியாழக்கிழமை) கர்நாடக மாநிலம் சிக்கோடியில் தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டார். அங்கு நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய அவர்,
"காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி ஆட்சி காலத்தில் 3 விதமான வளர்ச்சிகள் நிகழ்ந்தது. பணவீக்கம், இடைத்தரகர்கள் மற்றும் சில குடும்பங்கள் ஆகிய மூன்று தான் வளர்ச்சி கண்டது.
கர்நாடகாவில் உள்ள காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளம் (ஜேடிஎஸ்) கூட்டணி பல மேடைகளில் ஒத்துப்போகாது. ஆனால், நான்கு விஷயத்தில் மட்டும் ஒத்துப்போகும். அவை, தேசியவாதத்தை விமரிசிப்பது, குடும்ப அரசியலுக்கு ஆதரவு தெரிவிப்பது, ஊழல் மற்றும் காலையும், மாலையும் மோடியை விமரிசிப்பது ஆகும்.
அவர்களுக்கு வாக்கு வங்கி மட்டும் தான் பிரச்னை. மக்களின் நலன் மற்றும் நாட்டு நலன் குறித்து அவர்களுக்கு கவலை இல்லை.
கர்நாடக முதல்வர் ராணுவ வீரர்களை இழிவுபடுத்துகிறார். சுயமரியாதை உள்ள இந்திய குடிமகன் யாராவது முதல்வர் சொல்வதை ஏற்றுக்கொள்வார்களா? ராணுவ வீரர்களுக்கு எதிராக தவறான மொழியை பயன்படுத்தியுள்ளார்.
இது நாட்டுக்கும், ராணுவ வீரர்களுக்கும் ஏற்பட்ட இழிவு இல்லையா? நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா? இந்த ஒரு கருத்துக்காகவே அவருடைய மொத்த குடும்பமும் பொது வாழ்வில் இருந்து ஒதுக்கிவைக்கப்படவேண்டும்.
பயங்கரவாதிகளுக்கும், நக்ஸல்களுக்கு எதிராக சண்டையிட்டுக் கொண்டிருக்கும் நமது ராணுவ வீரர்கள் சிறப்பு அதிகாரங்கள் மற்றும் பாதுகாப்பை பெறுகின்றனர். அதை காங்கிரஸ் நீக்க விரும்புகிறது. அவர்களுக்கு பயங்கரவாத ஆதரவாளர்கள் வேண்டும் மற்றும் ராணுவ வீரர்களுக்கு எதிராக கல் வீசுபவர்கள் பொய் வழக்குகள் போடவேண்டும்.
கடந்த 5 ஆண்டுகளில் நான் பணியாற்றியவிதம் உங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறதா? பாகிஸ்தானை அவர்களது இடத்துக்கு சென்று தாக்கினோம். உங்களுக்கு மகிழ்ச்சியளிக்கவில்லையா? இந்த காங்கிரஸ்காரர்கள் நமது ராணுவ வீரர்களை நம்பமாட்டார்கள்" என்றார்.