காங்கிரஸ் ஆட்சியில் இருந்த காலகட்டங்களில்தான் நாட்டில் பயங்கரவாதம் தலை தூக்கியது என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் குற்றம்சாட்டினார்.
உத்தரப் பிரதேச மாநிலம், ஜாலெளனில் சனிக்கிழமை நடைபெற்ற பாஜக பொதுக் கூட்டத்தில் பேசிய அவர், மேலும் கூறியதாவது:
மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த காலகட்டங்களில்தான், நாட்டில் பயங்கரவாதம் தலை தூக்கியது. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, தக்க பதிலடி கொடுத்து பயங்கரவாதத்தை ஒடுக்கியது.
நமது ராணுவத்தினருக்குத் தற்போது முழு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது. நமது மத்திய அரசும், பிரதமர் மோடியும் யாருக்கும் தொந்தரவு கொடுப்பதில்லை. ஆனால், எந்தவொரு நாடோ அல்லது பயங்கரவாதியோ, பிரிவினைவாதியோ இந்தியாவை சீர்குலைக்க நினைத்தால், அவர்கள் தப்பிக்க முடியாது.
பிரதமர் மோடியின் தலைமையிலான அரசின் ஆட்சியில், நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சியடைந்துள்ளது. வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் உலக நாடுகளின் வரிசையில் இந்தியா முதலிடம் பிடிக்கும்.
தோல்வி பயத்தாலும், மோடி மீண்டும் பிரதமராகி விடுவார் என்ற அச்சத்தாலும், சமாஜவாதியும், பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டணி அமைத்துள்ளன. தேர்தலுக்காக கூட்டணி அமைத்தாலும், மனதளவில் அவர்கள் ஒருவருக்கொருவர் எதிராக உள்ளனர் என்றார் ராஜ்நாத் சிங்.