ரதமர் நரேந்திர மோடி தொடர்பான இணையதளத் தொடரை வெளியிடுவதற்கு எரோஸ் நவ் நிறுவனத்துக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
மக்களவைத் தேர்தலையொட்டி, தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் இந்த தடை உத்தரவை தேர்தல் ஆணையம் பிறப்பித்துள்ளது.
இணையதளத் தொடர் பிரபலமாகி வரும் தற்காலச் சூழலில், பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாற்றை சித்திரிக்கும் இணையதளத் தொடரை எரோஸ் நவ் நிறுவனம் தயாரித்துள்ளது.
"மோடி- ஒரு சாமானியரின் பயணம்' என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ள இந்த தொடர், மோடியின் குழந்தைப் பருவம் முதல் அவர் தேசியத் தலைவராகப் பரிணமித்தது வரை அவரது வாழ்வின் வெவ்வேறு கட்டங்களை சித்திரிப்பதாக உள்ளது. இந்தத் தொடரின் 5 பாகங்கள் ஏற்கெனவே இணையத்தில் வெளியாகி இருந்தன.
இந்நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால், இந்த இணையதளத் தொடருக்கு தேர்தல் ஆணையம் சனிக்கிழமை தடை விதித்தது. இதுகுறித்து அந்த ஆணையம் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டிருப்பதாவது:
தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால், மக்களவைத் தேர்தல் முடிவடையும் வரை "பி.எம். நரேந்திர மோடி' திரைப்படத்தை வெளியிடுவதற்கு தேர்தல் ஆணையம் கடந்த 10-ஆம் தேதி தடை விதித்தது.
அதேபோல், மோடி தொடர்பான இணையதளத் தொடருக்கும் தடை விதிக்கப்படுகிறது. மேலும், இணையதளத்தில் கிடைக்கக் கூடிய மோடி தொடர்பான தொடரின் விடியோக்களை எரோஸ் நிறுவனம் நீக்கிவிட வேண்டும்.
ஏனெனில், தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தும் விடியோக்களை மின்னணு ஊடகங்களில் ஒளிபரப்பு செய்யக் கூடாது. பிரதமர் மோடி, நாட்டின் முக்கிய அரசியல் தலைவராகவும், மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளராகவும் உள்ளார். எனவே, அடுத்த உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை, மோடி தொடர்பான தொடரை எரோஸ் நவ் நிறுவனம் இணையத்தில் பதிவேற்றம் செய்யக் கூடாது என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.