ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசாரின் பயங்கரவாத செயல்கள் குறித்த முழுமையான ஆதாரங்கள் சீனாவுடன் பகிரப்பட்டுள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மத்திய வெளியுறவுத் துறை செயலர் விஜய் கோகலே இரு நாள் பயணமாக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) சீனா சென்றடைந்தார். இந்த பயணத்தின் போது மசூத் அசார் விவகாரம் குறித்து சீனாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், மத்திய வெளியுறவுத் துறை செயலர் விஜய் கோகலே இன்று சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங்-யீயை சந்தித்தார்.
இந்த சந்திப்பின் போது மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்படுவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதா என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்திடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்துள்ள வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் ரவீஷ் குமார்,
"ஜெய்ஷ்-ஏ-முகமது மற்றும் அதன் தலைவர் மசூத் அசாரின் பயங்கரவாத செயல்கள் குறித்த முழுமையான ஆதாரங்கள் சீனாவுடன் பகிரப்பட்டுள்ளது. மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிப்பது குறித்து இனிமேல் அல்-காய்தா தடை ஆலோசனைக் குழு மற்றும் ஐ.நா.வின் மற்ற உறுப்பு நாடுகள் தான் முடிவு எடுக்கவேண்டும்.
இந்தியக் குடிமக்கள் மீது கொடூர தாக்குதல் நடத்தும் பயங்கரவாத தலைவர்களை நீதிக்கு முன் கொண்டுவர, வாய்ப்புள்ள அனைத்து இடங்களிலும் இந்தியா தொடர்ந்து முயற்சிகளை மேற்கொள்ளும்" என்றார்.
புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு, மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கக் கோரி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் பிரான்ஸ் வரைவு தீர்மானத்தை தாக்கல் செய்தது. இதற்கு அமெரிக்கா, பிரிட்டன், ரஷியா உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்தன. ஆனால், இந்த தீர்மானத்துக்கு சீனா எதிர்ப்பு தெரிவித்தது.