புது தில்லி: சமூக தளங்களை விடவும் ஊடகங்களின் டிஆர்பியைப் பார்த்து பயப்படுகிறேன் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
நடிகர் அக்சய் குமாருடன் மனம் திறந்து உரையாடியுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. அந்த உரையாடல்களின் சாராம்சம் விடியோக்களாகவும், செய்திகளாகவும் இன்று வெளியாகிக் கொண்டிருக்கிறது.
அதில் முக்கியமான ஒரு கருத்தை பிரதமர் மோடி பதிவு செய்துள்ளார். நிச்சயம் அது ஒரு யோசிக்கவேண்டிய விஷயம் என்பதால் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.
பல்வேறு விஷயங்களைப் பேசிய மோடி அக்சய் குமாரிடம் கூறியிருப்பதாவது, முன்பெல்லாம் நான் பேசும் போது சின்ன சின்ன நகைச்சுவைகளை சேர்த்துக் கொள்வேன். அப்படி பேசுவது என் இயல்பும் கூட. ஆனால் தற்போது அப்படி பேசுவதற்கு பயமாக இருக்கிறது.
அதாவது நான் பொதுக் கூட்டங்களிலோ நிகழ்ச்சியிலோ பேசும் போது ஏதேனும் நகைச்சுவையாகக் கூறினால், ஊடகங்கள் தங்களது டிஆர்பிக்காக நான் நகைச்சுவையாக அல்லது விளையாட்டாக எதையாவது கூறினால், அந்த வாக்கியத்தில் இருந்து ஒரு வார்த்தையை மட்டும் எடுத்துக் கூறி பிரதமர் மோடி இப்படி பேசினார் என்று செய்தி வெளியிட்டு டிஆர்பி-யை ஏற்றுகிறார்கள். இதனால் நகைச்சுவையாக பேசுவதற்கே பயமாக இருப்பதால் அப்படி பேசுவதையே நிறுத்திவிட்டேன்.
அப்போது குறுக்கிட்ட அக்சய் குமார், ஆமாம், சமூக ஊடகங்களும் அதை வைத்து மீம்ஸ்கள் போட ஆரம்பித்துவிடுகின்றன என்று கூற, சமூக ஊடகங்களை விடவும் ஊடகங்களின் டிஆர்பி மீதுதான் எனக்கு பயமே என்று மோடி கூறியுள்ளார். இவ்விதமாக அந்த உரையாடல் அமைந்திருந்தது.