படித்த இளைஞர்களை பக்கோடா மற்றும் தேநீர் விற்கக் கூறும் அரசு நமது நாட்டுக்குத் தேவையில்லை என்று பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசை பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி விமர்சித்துள்ளார்.
"பக்கோடா விற்பதும் ஒரு வேலைவாய்ப்புதான்' என்று பிரதமர் நரேந்திர மோடி முன்பு கூறியிருந்தார். பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவும் அதற்கு ஆதரவு தெரிவித்திருந்தார். மூன்றாம் கட்ட மக்களவைத் தேர்தல் தினத்தில் அதனை நினைவுகூர்ந்து மாயாவதி சுட்டுரையில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில், "இந்தியாவில் உள்ள 130 கோடி மக்களுக்கும் முக்கியமாக படித்தவர்கள், இளைஞர்கள், வேலைவாய்ப்பு இல்லாதவர்கள் ஆகியோருக்கு இந்த அரசு தேவையில்லை. ஏனெனில், இளைஞர்களுக்கு உரிய வேலைவாய்ப்பை உருவாக்கித் தராமல், அவர்கள் பக்கோடாவும், தேநீரும் விற்பனை செய்து பிழைத்துக் கொள்ள வேண்டும் என்று வழிகாட்டியது இந்த மத்திய அரசு.
வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் முழுமையாகத் தோல்வியடைந்துவிட்ட இந்த அரசை வீட்டுக்கு அனுப்ப மக்கள் ஏற்கெனவே முடிவெடுத்துவிட்டனர். முழுவதும் மக்கள் விரோதக் கொள்கைகளை முன்னிறுத்திச் செயல்படும் இந்த அரசு நிச்சயமாகவே அகற்றப்பட்ட வேண்டியது' என்று மாயாவதி கூறியுள்ளார்.
"வாக்களிக்கப்பது என்பது அரசமைப்புச் சட்டப்படி நம் அனைவருக்கும் அளிக்கப்பட்டுள்ள உரிமை. அதன் மூலம் நம்மை யார் ஆள வேண்டும் என்பதை முடிவு செய்ய முடியும். எனவே, தேர்தல் என்பதை நமது நலன் சார்ந்தது என்பதை உணர்ந்து மக்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும். மக்கள் நலமுடனும், வளமுடனும் வாழ நல்லாட்சி தேவை. அதற்கு மக்கள் அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் முக்கியம்' என்று மாயாவதி மற்றொரு சுட்டுரைப் பதிவில் கூறியுள்ளார்.