இட ஒதுக்கீடு விவகாரத்தில் பிரதமர் மோடி நாட்டை தவறாக வழிநடத்துகிறார் என்று பகுஜன்சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி புதன்கிழமை குற்றம் சாட்டினார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட சுட்டுரையில் பதிவிட்டுள்ளதாவது: இட ஒதுக்கீடு தொடர்பாக பிரதமர் மோடி மேற்கொண்டுள்ள அனைத்து விதமான முயற்சிகளும் நாட்டை தவறாகவே வழிநடத்தி வருகிறது. இதற்கு முன்பு ஆட்சி புரிந்த காங்கிரஸ் அரசும், வெறும் வார்த்தை ஜாலங்களில் மட்டுமே ஈடுபட்டு, எஸ்சி, எஸ்சி மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அளிக்க வேண்டிய இட ஒதுக்கீட்டை முற்றிலும் வழங்காமலும், எவ்வித செயல்பாட்டிற்கு கொண்டு வராமலும் புறக்கணித்தது.
இவர்களைப் போலவே, மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி நடத்தி வரும் பாஜக அரசுகளும், தலித்துகள், பழங்குடியினர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களின் உரிமைகளை முற்றிலும் புறக்கணித்து விட்டது. இதுவரை பாஜக அரசுகள் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் எத்தனை அரசு பணியிடங்களை பூர்த்தி செய்தது என்பதை நிருபிக்க இயலுமா? இது தொடர்பாக, பிரதமர் மோடியும், பாஜகவினரும் விரிவான அறிக்கையை வழங்க வேண்டும் என்று அதில் பதிவிட்டுள்ளார்.