ஜம்மு-காஷ்மீர் மாநிலம், அனந்த்நாத் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் பயங்கரவாதிகளிடையே இன்று வியாழக்கிழமை (ஏப் 25) ஏற்பட்ட மோதலில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
அனந்த்நாத் மாவட்டத்தில் உள்ள பிஜ்பெஹாரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதையடுத்து அந்த பகுதியை சுற்றி வளைத்து பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது, அங்கு மறைந்திருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தினர். அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாதுகாப்பு படையினரும் துப்பாக்கியால் சுட்டனர். அதையடுத்து இரு தரப்பினரும் இடையே மோதல் மூண்டது.
இதில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். உயிரிழந்த பயங்கரவாதிகளின் உடல்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை.
தொடர்ந்து அந்த பகுதியில் பாதுகாப்புப்படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அந்த பகுதியில் இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது.