பிரதமர் நரேந்திர மோடி விளம்பரப் பிரியர் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா விமர்சித்துள்ளார்.
உத்தரப் பிரதேசத்தின் புந்தேல்கண்ட் பகுதியில் புதன்கிழமை பிரசாரம் மேற்கொண்ட அவர் பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்தார்.
அப்போது, "மோடி பிரதமராக இல்லை. தனக்கு விளம்பரம் தேடிக் கொள்ளும் நபராகவே இருக்கிறார். புந்தேல்கண்ட் பகுதியில் வரலாறு காணாத வறட்சி நிலவும் நேரத்தில், பிரதமர் பயணிக்கும் சாலைகளை லாரிகளில் தண்ணீர் கொண்டு வந்து சுத்தம் செய்கிறார்கள்' என்று குற்றம்சாட்டினார்.
தொடர்ந்து உத்தரப் பிரதேசத்தின் ஃபதேபூரில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட அவர் பேசியதாவது:
அரசியல்ரீதியாக நமது நாட்டில் மிகப்பெரிய மாற்றம் தேவைப்படுகிறது. எனவே, மக்கள் நமது பிராந்தியம், நமது நலன் என்ற கண்ணோட்டத்தில் மட்டும் வாக்களிக்கக் கூடாது. வாக்களிப்பதற்கு முன்பு நமது எதிர்கால தலைமுறையின் நன்மையைக் கருத்தில் கொள்ள வேண்டும். நாட்டில் நாம் பாதுகாப்பாக வாழ வேண்டும் என்பதற்கு உரிய முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
இந்த விஷயத்தில் அரசியல்ரீதியான வேறுபாடுகள், கசப்புணர்வுகளை மனதில் கொள்ள வேண்டும். வெகுஜன மக்களின் நன்மைக்காக பாடுபடுபவர்களையும், அவர்களின் கவலைகளையும் பிரச்னைகளையும் புரிந்து கொண்டு தீர்வுகாண முயற்சி செய்பவர்களுக்கு, வாக்களிக்கும்போது முன்னுரிமை தர வேண்டும்.
ஜனநாயகத்தில் மக்களைவிட பெரிய சக்தி வேறு எதுவும் கிடையாது. உங்கள் அனைவருக்குமே வாக்குரிமை உள்ளது. இது உங்கள் உரிமை மட்டுமல்ல, உங்களது மிகப்பெரிய பலமும் உங்கள் கைகளில் உள்ள வாக்குதான். உங்களிடம் உள்ள வாக்குரிமை ஓர் ஆயுதமும்கூட. இந்த ஆயுதத்தை நீங்கள் மிகச்சரியாகப் பயன்படுத்த வேண்டும்.
தேர்தல் பிரசாரத்தில் தொடர்ந்து பொய்களைப் பேசி வருபவர்களையும், உங்களுக்குத் தேவையில்லாத விஷயங்களைப் பேசி கவனத்தை திசை திருப்புபவர்களையும் புறக்கணிக்க வேண்டும் என்றார் பிரியங்கா.