ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் அமைப்பின் 370-வது மற்றும் 35ஏ சட்டப் பிரிவுகளை திரும்பப் பெறுவதற்கான அறிவிப்பாணை குடியரசுத் தலைவர் கையெழுத்துடன் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் இதனை அறிவித்தார். இதற்கு காங்கிரஸ், பிடிபி, திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்நிலையில், மாநிலங்களவையில் இருந்த பிடிபி கட்சியின் எம்.பி. மிர் முகம்மது ஃபையஸ், அந்த அரசாணையை கிழித்தெறிந்து அமளியில் ஈடுபட்டார். இதையடுத்து மாநிலங்களவையில் இருந்து 2 பிடிபி உறுப்பினர்களையும் வெளியேற்றுமாறு மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு உத்தரவிட்டார்.