தலைவரைத் தேர்வு செய்ய கூடுகிறது காங். செயற்குழு: ஆக.10-இல் கூட்டம் 

தில்லியில் வரும் 10-ஆம் தேதி நடைபெறவுள்ள காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில், அக்கட்சிக்கு புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்பட அதிக வாய்ப்பிருப்பதாகத் தெரிகிறது.
தலைவரைத் தேர்வு செய்ய கூடுகிறது காங். செயற்குழு: ஆக.10-இல் கூட்டம் 

தில்லியில் வரும் 10-ஆம் தேதி நடைபெறவுள்ள காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில், அக்கட்சிக்கு புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்பட அதிக வாய்ப்பிருப்பதாகத் தெரிகிறது.
 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் அடைந்த தோல்விக்குப் பொறுப்பேற்று தலைவர் பதவியிலிருந்து ராஜிநாமா செய்வதாக ராகுல் காந்தி அறிவித்தார். பதவி விலகல் முடிவை வாபஸ் பெறும்படி தலைவர்கள் செய்த சமரசத்தை ராகுல் காந்தி ஏற்கவில்லை. இந்நிலையில், தில்லியில் காங்கிரஸ் தலைமையகத்தில் வரும் 10-ஆம் தேதி காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் (அமைப்பு) கே.சி. வேணுகோபால், சுட்டுரையில் வெளியிட்டுள்ள பதிவில், "தில்லியில் காங்கிரஸ் தலைமையகத்தில் வரும் 10-ஆம் தேதி காலை 11 மணிக்கு செயற்குழுக் கூட்டத்தை கூட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது' எனத் தெரிவித்துள்ளார்.
 காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலகுவது தொடர்பான முடிவை ராகுல் காந்தி அறிவித்த பிறகு நடைபெறும் முதல் செயற்குழுக் கூட்டம் இதுவாகும். இக்கூட்டத்தில் ராகுல் காந்திக்குப் பதிலாக, காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்பட அதிக வாய்ப்பிருப்பதாகத் தெரிகிறது.
 பிரியங்காவுக்கு கரண் சிங் ஆதரவு: இதனிடையே, காங்கிரஸ் தலைவராக பிரியங்காவை தேர்வு செய்ய மூத்த தலைவர் கரண் சிங் ஆதரவு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "காங்கிரஸ் கட்சியினரை ஒருங்கிணைக்கும் சக்தியாக பிரியங்கா திகழ்வார்; தலைவராக பிரியங்கா பொறுப்பேற்றால், கட்சித் தொண்டர்களை அது உற்சாகமடையச் செய்யும். தலைவர் இல்லாமல் கட்சியை அப்படியே விட்டுவிடக் கூடாது. இது காங்கிரஸுக்கு நல்லதல்ல. பிரியங்கா மிகவும் புத்திசாலியான இளம்பெண் ஆவார்.அவருக்கு பேச்சுத் திறமை உள்ளது. நல்ல ஆளுமையும் உள்ளது' என்றார் கரண்சிங்.
 முன்னாள் மத்திய அமைச்சரும், திருவனந்தபுரம் தொகுதி காங்கிரஸ் எம்.பி.யுமான சசி தரூர், கட்சிப் பதவிகளுக்கு தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார். அவர் கூறுகையில், "காங்கிரஸ் கட்சிக்கு தற்காலிகமாக தலைவர் ஒருவரைத் தேர்வு செய்ய வேண்டும்; கட்சியிலுள்ள முக்கிய பதவிகளுக்கு உள்கட்சித் தேர்தல் நடத்தப்பட வேண்டும்' என்றார்.
 மிலிந்த் தேவ்ரா கருத்து: காங்கிரஸ் கட்சியின் மும்பை பிரிவுத் தலைவரான மிலிந்த் தேவ்ரா கூறுகையில், "கட்சித் தலைவர் பதவிக்கு தேவையான அனைத்து தகுதிகளும் சச்சின் பைலட், ஜோதிராதித்ய சிந்தியா ஆகியோரிடம் உள்ளன. அவர்கள் இருவரில் ஒருவரை தலைவராக்கலாம். அல்லது குறைந்தப்பட்சம் புதிய தலைவர் தேர்வு செய்யப்படும் வரையிலுமாவது, தற்காலிகத் தலைவராக 2 பேரில் ஒருவரை தேர்வு செய்ய வேண்டும். இதற்கு சோனியா காந்தி குடும்பத்தினரின் வெளிப்படையான ஆதரவு அவசியம்' என்றார்.
 காங்கிரஸ் கட்சியின் சட்ட திட்டப்படி, தலைவர் பதவி காலியாகும்பட்சத்தில் மூத்த பொதுச் செயலாளர், தலைவரின் பணிகளை மேற்கொள்ள வேண்டும்; அதன்பிறகு காங்கிரஸ் செயற்குழு கூடி, தலைவர் பதவிக்கு தற்காலிகமாக ஒருவரை தேர்வு செய்ய வேண்டும். அவர், புதிய தலைவர் தேர்வு செய்யப்படும் வரையில், தற்காலிக தலைவராக செயல்படுவார். இதுகுறித்து காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்படலாம் எனத் தெரிகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com