"திறன்மிகு இந்தியா' திட்டத்தை முன்வைத்து, மத்தியில் ஆளும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசை காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து சுட்டுரையில் அவர் வெளியிட்டுள்ள பதிவுகளில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: மத்திய அரசின் பிரதம மந்திரி கௌசல் விகாஸ் யோஜனா திட்டத்தின்கீழ், 72 லட்சம் பேருக்கு பயிற்சி வழங்கப்பட்டது. அவர்களில் 15.23 லட்சம் பேருக்கு மட்டுமே பணியிடம் கிடைத்துள்ளது. ஒன்றுமில்லாத ஒரு திட்டம் அதிக விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது. "திறன்மிகு இந்தியா' திட்டம் மிகவும் ஆரவாரமாக மத்திய அரசால் தொடங்கப்பட்டது.
உத்தரப் பிரதேச மாநிலத்தில், 10 லட்சம் பேர் பயிற்சி பெற்றனர். ஆனால் அவர்களில் 2 லட்சம் பேருக்கு மட்டுமே வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. இதுகுறித்து மத்திய அரசு விளக்கமளிக்க வேண்டும் என்று அந்தப் பதிவுகளில் பிரியங்கா குறிப்பிட்டுள்ளார்.