மத்திய அரசின் அறிவுறுத்தலைத் தொடர்ந்து, காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியிலிருந்து சுற்றுலாப் பயணிகள் வேகமாக வெளியேறிவரும் நிலையில், ஸ்ரீநகர்-தில்லி இடையேயான விமானக் கட்டணத்தை ஏர் இந்தியா விமான நிறுவனம் குறைத்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் கூறியதாவது: ஏர் இந்தியா விமானத்தில் ஸ்ரீநகரிலிருந்து தில்லிக்கு செல்வதற்கான கட்டணம் ரூ.9,500 இல் இருந்து மேலும் குறைக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக ரூ.6,715 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தில்லியிலிருந்து ஸ்ரீநகருக்கு செல்வதற்கு வரும் 15ஆம் தேதி வரை பயணக் கட்டணம் ரூ.6,899-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று அந்தச் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். முன்னதாக, காஷ்மீரிலிருந்து புறப்படும் விமானங்களின் கட்டணங்களை இந்தச் சூழ்நிலையில் அதிகரிக்கக் கூடாது என்று விமான நிறுவனங்களுக்கு மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் அறிவுறுத்தியிருந்தது.