புது தில்லி: காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து ஸ்ரீநகரில் வெள்ளிக்கிழமை மிகப்பெரிய போராட்டம் நடத்தப்பட்டதாக வெளியான தகவல் ஜோடிக்கப்பட்டது என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஸ்ரீநகரில் தடைசெய்யப்பட்ட பகுதிகளில் நேற்று 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கூடி போராட்டத்தில் ஈடுபட்டதாக ஊடகங்களில் வெளியான தகவல் முற்றிலும் ஜோடிக்கப்பட்ட, உண்மையற்ற தகவல் என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீநகரில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டதாக ராய்ட்ர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டிருந்ததாகக் கூறி, டான் செய்தி வெளியிட்டது.
ஆனால், வெள்ளிக்கிழமை தொழுகை நடத்தவும், பக்ரீத் பண்டிகைக்குத் தேவையானவற்றை வாங்கவும் ஜம்மு காஷ்மீரில் பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு நேற்று தளர்த்தப்பட்டது. இதையடுத்து இன்று ஜம்மு பகுதியில் உள்ள பள்ளிகள் திறக்கப்பட்டன.
இந்த நிலையில், மிகப்பெரிய போராட்டம் நடத்தப்பட்டதாக வெளியான தகவலில் உண்மையில்லை என்றும், ஸ்ரீநகர் மற்றும் பாரமுல்லா பகுதிகளில் சின்னச் சின்ன போராட்டங்கள் நடந்ததாகவும், அங்குமே 20க்கும் அதிகமான மக்கள் கூட அனுமதிக்கப்படவில்லை என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.