அத்திவரதர் பெருவிழாவின் 43-ஆவது நாளான திங்கள்கிழமை பெருமாள் மஞ்சள் நிறப் பட்டாடையும், பச்சை நிற அங்கவஸ்திரமும் அணிந்து, பழங்களால் செய்யப்பட்ட ராஜ கிரீடமும், சிவப்பு, வெள்ளை மலர்களால் செய்யப்பட்ட வரிமாலை, மகிழம்பூ மாலைகள் சூடி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திங்கள்கிழமை ஒரே நாளில் 5 லட்சம் பேர் அத்திவரதரை தரிசனம் செய்தனர்.
இந்நிலையில், தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் தனது குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் அத்திப்பழ மாலையும், சால்வையும் அணிவித்து, அத்திவரதரின் திருவுருவப்படமும், கோயில் பிரசாதமும் பட்டாச்சாரியர்கள் வழங்கினர்.
தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவுடன், ஆந்திர மாநில நகரி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும், நடிகையுமான ரோஜாவும் அத்திவரதரை தரிசனம் செய்தார்.
உச்சநீதிமன்ற நீதிபதி சஞ்சய் கிஷன் கௌல் தனது குடும்பத்தினருடன் வந்து சுவாமி தரிசனம் செய்தார்.
தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன், திருச்சி தொகுதி காங்கிரஸ் எம்.பி. சு.திருநாவுக்கரசர், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் கே.பணீந்திர ரெட்டி, இசையமைப்பாளர் சங்கர்கணேஷ், தமிழக பா.ஜ.க. தலைவர்களில் ஒருவரான சி.பி.ராதாகிருஷ்ணன், பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி ஆகியோரும் அத்திவரதரை திங்கள்கிழமை தரிசனம் செய்தனர்
அத்திவரதர் தரிசனம் ஏற்கெனவே திட்டமிட்டபடி ஆக.16-ஆம் தேதியுடன் நிறைவு பெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.