மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணத் தொகுப்பு விரைவில் அறிவிக்கப்படும் என்று கர்நாடக முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா தெரிவித்தார்.
கர்நாடக மழை வெள்ள பாதிப்பில் 54 பேர் பலியாகியுள்ளனர். 1,151 நிவாரண முகாம்களில் சுமார் 4 லட்சம் பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
சிவமொக்கா மாவட்டம், தீர்த்தஹள்ளியில் செவ்வாய்க்கிழமை வெள்ளப் பாதிப்புகளைப் பார்வையிட்ட பிறகு, செய்தியாளர்களிடம் முதல்வர் எடியூரப்பா கூறியது: மாநில அளவில் பரவலாக பலத்த மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பலர் வீடுகளை இழந்துள்ளனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள 40 ஆயிரம் குடும்பங்களுக்கு நிவாரண உதவிகளை உடனடியாக வழங்குவதே அரசின் முக்கிய நோக்கமாக உள்ளது.
நிவாரணப் பணிகளுக்குத் தேவையான நிதி அரசிடம் உள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்ச் சேதம் குறித்து வருவாய்த் துறையினர், வனத் துறையினர் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி விரைந்து வழங்கப்படும்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து விவசாயிகளுக்கும் உரிய நிவாரணம் வழங்கப்படும். சிவமொக்கா நகரில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீட்டு உபயோகப் பொருள்கள் வாங்குவதற்காக உடனடியாக ரூ. 10 ஆயிரம் வழங்க மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளேன். இதன்மூலம் சிவமொக்காவில் பாதிக்கப்பட்ட ஆயிரம் குடும்பத்தினர் பயனடைவார்கள்.
மழையால் ஓரளவு சேதமடைந்துள்ள வீடுகளுக்கு தலா ரூ. ஒரு லட்சம் வழங்கப்படும். வசிக்க முடியாத வகையில் வீடு சேதமடைந்திருந்தால் ரூ. 5 லட்சம் வரை நிவாரணம் வழங்கப்படும். சிவமொக்காவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் வகையில் மாநகராட்சிக்கு ரூ. 50 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் விரைவில் நிவாரணத் தொகுப்பு அறிவிக்கப்படும் என்றார்.