ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ஷா ஃபசல், தில்லி விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டு, ஸ்ரீநகருக்கு திருப்பி அனுப்பப்பட்டார்.
தில்லியில் இருந்து துருக்கி விமானத்தில் இஸ்தான்புல் நகர் செல்வதற்காக, இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்துக்கு ஷா ஃபசல் செவ்வாய்க்கிழமை இரவு வந்திருந்தார். விமான நிலையத்தில் அவரை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி, ஸ்ரீநகருக்கு திருப்பி அனுப்பி வைத்தனர்.
பின்னர், அவரை பொது அமைதி பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ஜம்மு-காஷ்மீர் போலீஸார் கைது செய்தனர். ஷா ஃபசலுக்கு எதிராக ஜம்மு-காஷ்மீர் காவல் துறை லுக்-அவுட் நோட்டீஸ் வெளியிட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அதன்படி, அவர் வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கப்படுவதாக, காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
அண்மையில் தனது பதவியை ராஜிநாமா செய்த ஷா ஃபசல், ஜம்மு-காஷ்மீர் மக்கள் இயக்கம் என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியைத் தொடங்கினார். ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டபோது அதை எதிர்த்து, கடுமையாக விமர்சித்தார். சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டபோது, வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்த அரசியல் தலைவர்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.