பூடான் பிரதமரின் அழைப்பை ஏற்று இரண்டு நாள் அரசு முறை சுற்றுப்பயணமாக பிரதமர் நரேந்திர மோடி நாளை அந்நாட்டுக்கு செல்கிறார்.
இந்தியாவின் நம்பகமான நட்பு நாடாகத் திகழும் பூடானுக்கு பிரதமர் மோடி ஆகஸ்ட் 17-இல் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறார். பிரதமர் அந்நாட்டுக்குச் செல்வது இது இரண்டாவது முறை. அண்டை நாடுகளிடம் நல்லுறைவைப் பேணுவதே பிரதான கொள்கையாக கொண்டு செயல்படுவதன் தொடர்ச்சியாகவே இந்த சுற்றுப் பயணம் திட்டமிடப்பட்டுள்ளது.
பூடானில் இரண்டு நாள்கள் சுற்றுப்பயணத்தின்போது பிரதமர் மோடி அந்த நாட்டு பிரதமர் லோட்டே ஷெரிங், மன்னர் ஜிக்மி கேஷஷர் நம்கியால் வாங்சக் ஆகியோரை சந்தித்து பேசவுள்ளார். அப்போது, இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தக உறவுகளை மேலும் பலப்படுத்தும் வகையில் ஒப்பந்தங்கள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
குறிப்பாக பொருளாதாரம் மற்றும் மேம்பாடு, நீர்மின் உற்பத்தி துறைகளில் ஒருங்கிணைப்புடன் செயல்படுவது குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது. மேலும், மண்டல ரீதியிலான முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னைகள், இதர விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் விவாதிப்பார்கள் என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அண்டை நாடுகளின் உறவுகளுக்கு முக்கியத்துவம் தரும் வகையில் கடந்த 2014-இல் முதல் முறையாக பிரதமர் பதவியேற்ற பிறகு பிரதமர் நரேந்திர மோடி பூடானுக்குத் தான் தனது முதல் வெளிநாட்டு சுற்றுப் பயணத்தை மேற்கொண்டார். அப்போதிலிருந்தே இந்தியா மற்றும் பூடானுக்கு இடையிலான இருரதப்பு உறவு சிறந்த முறையில் முன்னேற்றம் கண்டு வருகிறது.