உடல்நலக் குறைவு காரணமாக, தில்லி செங்கோட்டையில் நடைபெற்ற சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் பாஜக மூத்த தலைவரும், முன்னாள் துணைப் பிரதமருமான எல்.கே. அத்வானி (91) பங்கேற்கவில்லை.
ஒவ்வோர் ஆண்டும் சுதந்திர தினத்தின்போது, தன் வீட்டில் கொடியேற்றிவிட்டு, தில்லி செங்கோட்டையில் நடைபெறும் சுதந்திர தின நிகழ்ச்சிக்கு செல்வதை அத்வானி வழக்கமாகக் கொண்டிருந்தார். உடல்நலக் குறைவு காரணமாக இந்த ஆண்டு சுதந்திர தினத்தின்போது, இந்த இரு நிகழ்ச்சிகளிலும் அத்வானி பங்கேற்கவில்லை என்று புதன்கிழமை அவரது அலுவலகத்தின் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தில்லியில் தனது வீட்டில் அத்வானி வியாழக்கிழமை தேசியக் கொடியேற்றினார். இதுதொடர்பாக அவரது குடும்பத்தினர் கூறுகையில், அத்வானியின் உடல்நிலையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டதையடுத்து, வீட்டில் அவர் தேசியக் கொடியேற்றினார். எனினும், செங்கோட்டையில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்ச்சிக்கு செல்ல இயலவில்லை என்றனர்.
ஒவ்வோர் ஆண்டும் சுதந்திர தினத்தின்போது, தில்லி செங்கோட்டையில் பிரதமர் தேசியக் கொடியேற்றுவது மரபாக உள்ளது. அந்த நிகழ்ச்சியில் பல ஆண்டுகளாக தவறாது பங்கேற்று வந்த அத்வானி, இந்த முறை பங்கேற்கவில்லை.