இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வி.பி.சந்திரசேகர் சென்னையில் உள்ள அவரது வீட்டில் வியாழக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வி.பி.சந்திரசேகர் (57), சென்னை மயிலாப்பூர் விஸ்வேஷ்வரபுரத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.
இந்தநிலையில் சந்திரசேகர், வீட்டின் மாடியில் உள்ள தனது அறைக்கு வியாழக்கிழமை மாலை சென்றார். ஆனால் அவர், வெகு நேரம் திரும்பி வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது குடும்பத்தினர் இரவு கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது அங்கு சந்திரசேகர் மின் விசிறியில் வேட்டியால் தூக்கிட்டு இறந்து கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே அவர்கள், மயிலாப்பூர் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த மயிலாப்பூர் போலீஸார், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சந்திரசேகர் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவ இடத்தை சென்னை காவல்துறை உயர் அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அதேபோல் சந்திரசேகர் இறப்பில் ஏதேனும் மர்மம் உள்ளதா என்ற கோணத்தில் போலீஸார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
சந்திரசேகர் இந்திய கிரிக்கெட் அணிக்காக 7 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார். மேலும், அவர் தமிழ்நாடு கிரிக்கெட் அணிக்கு கேப்டனாகவும் இருந்துள்ளார். சந்திரசேகர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம், கிரிக்கெட் வீரர்களிடமும் கிரிக்கெட் ஆர்வலர்களிடமும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.