உடல்நலக் குறைவால் தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அருண் ஜேட்லி, தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளார். பிகார் முதல்வர் நிதீஷ் குமார், மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு நேரில் சென்று அவரது உடல்நிலை குறித்துக் கேட்டறிந்தனர்.
சுவாசப்பிரச்னை உள்ளிட்ட உடல்நலக் கோளாறுகள் காரணமாக தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அருண் ஜேட்லி கடந்த 9-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பல்வேறு துறைகளைச் சேர்ந்த மருத்துவர்கள் குழு, தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறது. இருந்தபோதிலும், அவருக்கு செயற்கை சுவாசக் கருவிகளே இன்னமும் பொருத்தப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் சனிக்கிழமை தெரிவித்தனர். அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இதனிடையே, உத்தரப் பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவருமான மாயாவதி, ஜேட்லியின் உடல்நிலை குறித்து நேரில் விசாரித்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட சுட்டுரைப் பதிவில், ""எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நேரடியாகச் சென்று ஜேட்லியின் உடல்நலம் குறித்து அவரது உறவினர்களிடம் கேட்டறிந்தேன். அவர் முழுமையாக குணமடைந்து விரைவில் வீடு திரும்ப இறைவனை வேண்டுகிறேன்'' என்று குறிப்பிட்டிருந்தார்.
பிகார் முதல்வர் நிதீஷ் குமார், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்த்தன், மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல், காங்கிரஸ் தலைவர்கள் அபிஷேக் சிங்வி, ஜோதிராதித்ய சிந்தியா, விமானப்படைத் தலைமைத் தளபதி பி.எஸ். தனோவா உள்ளிட்டோரும் மருத்துவமனைக்குச் சென்று ஜேட்லியின் உடல்நலம் குறித்து விசாரித்தனர்.