பெங்களூரு: கர்நாடக முதல்வராக எடியூரப்பா மட்டுமே பதவியேற்ற நிலையில், அவரது அமைச்சரவையில் இடம்பெறும் 17 எம்எல்ஏக்கள் இன்று அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.
பெங்களூரில் உள்ள ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் இன்று காலை 10.30 மணி முதல் காலை 11.30 மணி வரை பதவியேற்றனர். அவர்களுக்கு கர்நாடக ஆளுநர் வஜூபாய் வாலா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
கர்நாடகத்தில் கடந்த 14 மாதங்களாக நடைபெற்று வந்த முதல்வர் குமாரசாமி தலைமையிலான மஜத -காங்கிரஸ் கூட்டணி அரசு ஜூலை 23-இல் கவிழ்ந்தது. இதைத் தொடர்ந்து, பாஜக மாநிலத் தலைவரான எடியூரப்பா முதல்வராக ஜூலை 26-இல் பதவியேற்றார். சரியாக 25 நாட்கள் கழித்து கர்நாடக அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்படுகிறது.
எடியூரப்பாவின் தலைமையிலான அமைச்சரவையில் கோவிந்த் கர்ஜோல், அஷ்வத் நாராயணன், லஷ்மண் சாவடி, அஷோக், ஜெகதீஷ் ஷெட்டர், ஸ்ரீராமுலு, சுரேஷ்குமார், சோமன்னா, சி.டி. ரவி, பசவராஜ் பொம்மை, மதுஸ்வாமி, சி.சி. பட்டீல், எச். நாகேஷ், பிரபு சவான், ஜோல்லி ஷஷி கலா, கே.எஸ். ஈஸ்வரப்பா உட்பட கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 17 எம்எல்ஏக்கள் இன்று அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டார்கள்.
குறிப்பாக பெங்களூருவைச் சேர்ந்த 4 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர்.
முன்னதாக, கர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவியேற்றுக் கொண்டதை அடுத்து, சட்டப்பேரவையில் ஜூலை 29-இல் நடைபெற்ற தனது அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் எடியூரப்பா வெற்றி பெற்றார். அவரைத் தவிர, அமைச்சராக யாரும் பதவியேற்காததால், வட கர்நாடகத்தில் ஏற்பட்ட வெள்ள நிவாரணப் பணியை எடியூரப்பா மட்டும் தன்னந்தனியாகக் கவனித்து வந்தார்.
கடந்த 25 நாள்களாக தனியாக அமைச்சரவையை நடத்தி வந்த எடியூரப்பாவை காங்கிரஸ், மஜத உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன.
இதைத் தொடர்ந்து, அமைச்சரவையை அமைக்க எடியூரப்பா தொடர்ந்து முயற்சி மேற்கொண்டிருந்தார். கடந்த ஆக. 16-இல் புது தில்லி சென்றிருந்த எடியூரப்பா, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவை சந்தித்து அமைச்சரவை அமைப்பதற்கான ஒப்புதல் பெற்று திரும்பினார்.