உன்னாவ் இளம்பெண் விபத்து விசாரணை: சிபிஐக்கு 2 வாரங்கள் கூடுதல் அவகாசம்

பாலியல் வன்கொடுமைக்கு ஆளான உன்னாவ் இளம்பெண்ணுக்கு நேர்ந்த சாலை விபத்து தொடர்பான விசாரணையை நிறைவுசெய்ய சிபிஐக்கு உச்சநீதிமன்றம் 2 வார கூடுதல் காலஅவகாசத்தை வழங்கியுள்ளது.
உன்னாவ் இளம்பெண் விபத்து விசாரணை: சிபிஐக்கு 2 வாரங்கள் கூடுதல் அவகாசம்


பாலியல் வன்கொடுமைக்கு ஆளான உன்னாவ் இளம்பெண்ணுக்கு நேர்ந்த சாலை விபத்து தொடர்பான விசாரணையை நிறைவுசெய்ய சிபிஐக்கு உச்சநீதிமன்றம் 2 வார கூடுதல் காலஅவகாசத்தை வழங்கியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம், உன்னாவ் பகுதியில் பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக பதின்வயதுப் பெண் ஒருவர் கடந்த 2017-ஆம் ஆண்டு புகார் அளித்தார். இதையடுத்து, செங்கர் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், அந்தப் பதின்வயதுப் பெண் சென்று கொண்டிருந்த கார் மீது லாரி ஒன்று மோதியதில், அவர் பலத்த காயமடைந்தார். அவரும், அவரது வழக்குரைஞரும் தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து திட்டமிட்டு நடத்தப்பட்டதாகப் பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டிய நிலையில், இது குறித்து 7 நாள்களுக்குள் விசாரணை நடத்தி, அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென சிபிஐக்கு உச்சநீதிமன்றம் கடந்த 2-ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது.
தேவைப்பட்டால், மேலும் 7 நாள் அவகாசம் அளிக்கப்படும்; ஆனால், 15 நாள்களுக்கு மேல் அவகாசம் அளிக்கப்பட மாட்டாது என உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது. இதனிடையே, பதின்வயதுப் பெண் தொடுத்த பாலியல் வன்கொடுமை வழக்கின் விசாரணையை உத்தரப் பிரதேசத்திலிருந்து தில்லிக்கு மாற்றிய உச்சநீதிமன்றம், இந்த விசாரணையை தினசரி அடிப்படையில் 45 நாள்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டுமெனவும் சிபிஐக்கு உத்தரவிட்டது.
இந்நிலையில், சாலை விபத்து தொடர்பாக விசாரணை நடத்த கூடுதல் கால அவகாசம் கோரி உச்சநீதிமன்றத்தில் சிபிஐ மனு தாக்கல் செய்திருந்தது. இது தொடர்பான விசாரணை, நீதிபதிகள் தீபக் குப்தா, அனிருத்தா போஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் திங்கள்கிழமை நடைபெற்றது. 

வாக்குமூலத்தைப் பெற முடியவில்லை: அப்போது, சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் ரஜத் நாயர் வாதிட்டதாவது:
சாலை விபத்தில் படுகாயமடைந்த பதின்வயதுப் பெண்ணும், அவரது வழக்குரைஞரும் தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 
எனவே, அவர்களின் வாக்குமூலத்தைப் பதிவு செய்ய இயலவில்லை. மேலும், பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்குகள் தில்லிக்கு மாற்றப்பட்டுவிட்டன. சாலை விபத்து வழக்கு மட்டுமே உத்தரப் பிரதேசத்தில் நடந்து வருகிறது. 
இதன் காரணமாக, இந்தச் சம்பவம் தொடர்பான தகவல்களையும் உரிய நேரத்தில் பெறுவதில் சிக்கல் எழுந்துள்ளது. எனவே, சாலை விபத்து தொடர்பான விசாரணையை நிறைவு செய்ய மேலும் 4 வாரங்கள் காலஅவகாசம் அளிக்க வேண்டும் என்று அவர் வாதிட்டார்.
இதை ஆராய்ந்த நீதிபதிகள், விசாரணையை நிறைவு செய்ய கூடுதலாக 2 வாரங்கள் அவகாசம் அளித்து உத்தரவிட்டனர். மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பதின்வயதுப் பெண்ணுடைய வழக்குரைஞரின் மருத்துவச் செலவுகளுக்காக ரூ.5 லட்சம் வழங்க வேண்டுமெனவும் உத்தரப் பிரதேச அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை செப்டம்பர் மாதம் 6-ஆம் தேதிக்கு அவர்கள் ஒத்திவைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com