போக்குவரத்து விதிமீறல்களுக்கு அதிகபட்ச அபராதம் விதிக்கும் வகையில் மோட்டார் வாகனச் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்ட 63 விதிகள் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறினார்.
தில்லியில், தனது அமைச்சகத்துக்கான புதிய இணையதளப் பக்கத்தை அவர் புதன்கிழமை தொடங்கி வைத்தார். அந்த நிகழ்ச்சியின்போது இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
மோட்டார் வாகனச் சட்டத்திருத்த மசோதா சமீபத்தில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதில் திருத்தப்பட்ட 63 விதிகளை வரும் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் அமல்படுத்துவதென முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த விதிகளின் மூலம் போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது, அதிக வேகத்தில் வாகனம் ஓட்டுவது, அதிக அளவில் வாகனத்தில் சுமை ஏற்றிச் செல்வது உள்ளிட்ட பல நடவடிக்கைகளுக்கான அபராதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த விதிகளை சட்ட ரீதியாக ஆய்வு செய்வதற்காக அவற்றை மத்திய சட்ட அமைச்சகத்துக்குப் பரிந்துரைத்துள்ளோம். இன்னும் 2 முதல் 4 நாள்களில் அந்த அமைச்சகம் தனது ஆய்வறிக்கையை அளிக்கும்.
நாட்டில் சாலை விபத்துகளுக்கு பிரதான காரணமாக இருப்பது சாலைக் கட்டமைப்புகளில் இருக்கும் கோளாறுகளாகும். விபத்துகளைக் குறைக்கும் வகையில் நெடுஞ்சாலைகளில் விபத்து ஏற்படக் கூடிய இடங்கள், இடைவெளிகள் ஆகியவற்றைக் கண்டறிவதற்காக ரூ.14,000 கோடி செலவில் திட்டம் ஒன்றை மத்திய அரசு தயாரித்து வருகிறது என்று நிதின் கட்கரி கூறினார்.