ஸ்ரீநகர், ஜம்மு மேயர்களுக்கு இணை அமைச்சர் நிலையிலான அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஜம்மு-காஷ்மீர் அரசின் கூடுதல் செயலர் சுபாஷ் சிப்பர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட உத்தரவில், ஸ்ரீநகர் மாநகராட்சி மேயர், ஜம்மு மாநகராட்சி மேயர் ஆகியோருக்கு அவர்களது மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில், இணை அமைச்சர் நிலையிலான அந்தஸ்து அளிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீரில் உள்ள மாநகராட்சி அமைப்புகளுக்கு 13 ஆண்டுகளுக்குப் பிறகு, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 4 கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்பட்டது. ஸ்ரீநகர் மாநகராட்சி மேயராக மக்கள் மாநாட்டுக் கட்சித் தலைவர் ஜுனைத் மட்டு, ஜம்மு மாநகராட்சி மேயராக சந்தர் மோகன் குப்தா ஆகியோர் உள்ளனர்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த 5ஆம் தேதி ரத்து செய்தது. ஜம்மு-காஷ்மீரை ஜம்மு-காஷ்மீர், லடாக் ஆகிய 2 யூனியன் பிரதேசங்களாகவும் பிரித்தது. இந்தச் சூழ்நிலையில், ஸ்ரீநகர் மாநகராட்சி மேயர், ஜம்மு மாநகராட்சி மேயர் ஆகியோருக்கு இணையமைச்சர் நிலையிலான அந்தஸ்து அளிக்கப்பட்டிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.