ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஊராட்சி ஒன்றியங்களுக்கு விரைவில் தேர்தல் நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது என்று அந்த மாநில அரசு அதிகாரி ஒருவர் கூறினார்.
இதுகுறித்து ஜம்மு-காஷ்மீர் முதன்மைச் செயலர் ரோஹித் கன்சால் கூறுகையில், "ஊராட்சி ஒன்றியங்களுக்கு விரைவில் தேர்தல் நடத்தலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தத் தேர்தல் மூலம் ஊராட்சி ஒன்றியங்களை செயல்பட வைக்க முடியும்' என்றார்.
ஜம்மு-காஷ்மீர் ஊரக வளர்ச்சித் துறை செயலர் ஷீதல் நந்தா கூறுகையில், "மாநிலம் முழுவதும் 316 ஊராட்சி ஒன்றியங்களுக்கு தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. செப்டம்பர் மாதத்துக்குள் தேர்தல் நடத்தி முடிக்கப்படும்' என்றார்.
ஜம்மு-காஷ்மீரில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் கடந்த ஆண்டு நடைபெற்றது. பஞ்சாயத்துத் தேர்தல் கடந்த 2011ஆம் ஆண்டு நடைபெற்றது.
ஜம்மு-காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து பிரிவு ரத்து செய்யப்பட்டதை அடுத்து படிப்படியாக பதற்ற சூழல் நீங்கி காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியில் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது என்று அதிகாரிகள் கூறினர்.