ஜம்மு-காஷ்மீரில் கல்வீச்சு கலவரம் காரணமாக லாரி ஓட்டுநர் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
பிஜ்பெரா எனுமிடத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை இந்த தாக்குதல் சம்பவம் நடந்தது. இதில் ஸ்ராதிபோரா உன்ஹால் பிஜ்பெரா பகுதியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் நூர் முகமது உயிரிழந்தார்.
இதுதொடர்பாக ஜம்மு-காஷ்மீர் போலீஸார் கூறுகையில்,
பாதுகாப்புப் படை வாகனம் எனக் கருதி அந்த லாரி மீது அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் கல்வீச்சு தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் படுகாயமடைந்த லாரி ஓட்டுநர் உடனடியாக மீட்கப்பட்டு பிஜ்பெரா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
பின்னர் அங்கிருந்து எஸ்.கே.ஐ.எம்.எஸ். சௌரா மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டது. ஆனால், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
லாரி ஓட்டுநர் மரணத்துக்கு காரணமான கல்வீச்சு தாக்குதலில் தொடர்புடையவர் கைது செய்யப்பட்டார். ஏற்கனவே ஸ்ரீநகரில் சில தினங்களுக்கு முன் நடந்த கல்வீச்சு தாக்குதல் சம்பவத்தில் ஒரு சிறுமிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதுதொடர்பாகவும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர்.