உத்தரப்பிரதேச மாநிலத்தில் காவல்துறையில் பணிபுரியும் இளம் காதல் ஜோடி, உயர் அதிகாரிகள் முன்னிலையில் காவல் நிலையத்திலேயே திருமணம் செய்துகொண்டனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் சஹாரன்பூர், தியோபந்த் காவல் நிலையத்தில் வைத்து இளம் காதல் ஜோடியின் திருமணம் நடந்துள்ளது. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் இருவருமே காவல்துறையில் பணியாற்றுபவர்கள்.
சஹாரன்பூரைச் சேர்ந்த குஷ்னசீப் மற்றும் அப்துல் மாலிக் இருவரும் சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்நிலையில், அவர்களது திருமணத்திற்கு பெற்றோர்கள் தொடர்ந்து கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில், சஹாரன்பூர் காவல்துறை மூத்த கண்காணிப்பாளர் முன்னிலையில் காதல் ஜோடி திருமணம் காவல் நிலையத்திலே நடைபெற்றது. இருவரும் முஸ்லீம் மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் முஸ்லிம் மத முறைப்படி, 'நிக்கா' நடைபெற்றது. காவல்துறையினர் மற்றும் அவர்களது குடும்பத்தினர் இந்த திருமண நிகழ்வில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
'எங்களது கடினமான காலங்களில் உதவியதற்காக நாங்கள் எப்போதும் இங்குள்ள அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு நன்றியுள்ளவர்களாக இருப்போம். காவல்நிலையத்தில் வைத்து எங்களது திருமணம் நடைபெற்றுள்ளது மிகவும் தனித்துவமானது. இந்நிகழ்வை என்றும் எங்களால் மறக்க முடியாது' என்று புதுமணத் தம்பதிகள் கூறியுள்ளனர்.
இந்தத் திருமண நிகழ்விற்காக காவல் நிலையம் அலங்கரிக்கப்பட்டிருந்ததுடன், அருகில் உள்ள பொதுமக்களும் இதில் கலந்துகொண்டனர்.