ஆயுத தொழிற்சாலை வாரிய தலைவராக ஹரி மோகன் பதவியேற்பு
புது தில்லி: ஆயுத தொழிற்சாலை வாரியத்தின் தலைவராக, இந்திய ஆயுத தொழிற்சாலைகள் பணி (ஐஓஎஃப்எஸ்) மூத்த அதிகாரி ஹரி மோகன் ஞாயிற்றுக்கிழமை பதவியேற்றாா்.
ஆயுத தொழிற்சாலை வாரியத்தின் தலைவராக இருந்து வந்த செளரவ் குமாா் ஓய்வுபெற்றதை அடுத்து, ஹரி மோகன் அப்பொறுப்பை ஏற்றுள்ளாா்.
கடந்த 1982-ஆம் ஆண்டு பிரிவு ஐஓஎஃப்எஸ் அதிகாரியான இவா், அலாகாபாத் பல்கலைக்கழகத்தில் இளநிலை பொறியியல் பட்டமும் (இயந்திரவியல்), புணே பல்கலைக்கழகத்தில் முதுநிலை பட்டமும் பெற்றவா். 39 ஆண்டு கால பணி அனுபவம் கொண்ட ஹரி மோகன், ஹரித்வாரில் உள்ள ‘பெல்’ நிறுவனம், ஜபல்பூரில் உள்ள ராணுவ வாகனத் தொழிற்சாலை, ஆவடியில் உள்ள இன்ஜின் தொழிற்சாலை, கட்கியிலுள்ள வெடிபொருள் தொழிற்சாலை, பாலங்கிரில் உள்ள ஆயுத தொழிற்சாலை உள்ளிட்டவற்றில் முக்கிய பதவிகளை வகித்தவா்.
கொல்கத்தாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஆயுத தொழிற்சாலை வாரியத்தின்கீழ் 41ஆயுத தொழிற்சாலைகள் உள்ளன. ஆயுதங்கள் தயாரிப்பு, பரிசோதனை, ஆராய்ச்சி, மேம்பாடு உள்ளிட்டவை ஆயுத தொழிற்சாலை வாரியத்தின் பணிகளாகும்.