மும்பை: பெருநிறுவனங்களுக்கான வரி குறைக்கப்பட்டுள்ளதால் சீனாவிலிருந்து இந்தியாவுக்கு இடம்பெயர 12 சர்வதேச நிறுவனங்கள் முனைப்பு காட்டி வருகின்றன என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது: சீனாவிலிருந்து தங்களின் நிறுவனங்களை இந்தியாவுக்கு மாற்ற முனைப்பு காட்டும் நிறுவனங்களுக்கு தேவையான உதவியைச் செய்ய சிறப்பு குழுவை ஏற்படுத்த உள்ளேன் என்று ஏற்கெனவே கூறியிருந்தேன்.
12 சர்வதேச நிறுவனங்கள் இந்தியாவுக்கு தங்களின் நிறுவனங்களை இடமாற்றம் செய்ய விரும்புகின்றன. இந்த நிறுவனங்களை சிறப்புக் குழு ஏற்கெனவே சந்தித்து கலந்தாலோசிக்கத் தொடங்கியது.
இந்தியாவுக்கு வர விரும்பும் அந்த நிறுவனங்களின் எதிர்பார்ப்புகள், அவற்றின் மனநிலை உள்ளிட்டவை குறித்து சிறப்புக் குழு ஆய்வு செய்துள்ளது. அந்த நிறுவனங்கள் இந்தியாவுக்கு இடம்பெயர ஏதுவாக அவற்றின் எதிர்பார்ப்புகள் பூர்த்தி செய்யப்படும்.
நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதத்தை உயர்த்த தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார் நிர்மலா சீதாராமன்.
கடுமையான சரிவை சந்தித்துள்ள நாட்டின் பொருளாதாரத்துக்கு புத்துயிரூட்ட பெருநிறுவனங்களுக்கான வரியை 10 சதவீதம் வரை மத்திய அரசு கடந்த செப்டம்பரில் குறைத்தது.