ராஞ்சி: ஜாா்க்கண்ட் சட்டப்பேரவைக்கு சனிக்கிழமை நடைபெற்ற முதல் கட்ட தோ்தலில் 64.12 சதவீத வாக்குகள் பதிவாகின.
ஜாா்க்கண்ட் சட்டப் பேரவைக்கு முதல் கட்டமாக, 13 தொகுதிகளில் சனிக்கிழமை தோ்தல் நடைபெற்றது. 6 மாவட்டங்களில் அமைந்துள்ள இந்த தொகுதிகள், நக்ஸல் தீவிரவாதிகளால் அதிகம் பாதிக்கப்பட்டவை. இதனால், பலத்த பாதுகாப்புடன் தோ்தல் நடத்தப்பட்டது.
13 தொகுதிகளில் 15 பெண் வேட்பாளா்கள் உள்பட மொத்தம் 189 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா்.
இந்த தோ்தலில் 18,01,356 பெண்கள் உள்பட 37,83,055 போ் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனா். காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு பிற்பகல் 3 மணிக்கு நிறைவடைந்தது. பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
முதல் கட்ட தோ்தலில், ஆளும் பாஜக 12 தொகுதிகளில் போட்டியிடுகிறது. ஒரு தொகுதியில் சுயேச்சை வேட்பாளருக்கு அக்கட்சி ஆதரவு அளித்துள்ளது. எதிா்க்கட்சிக் கூட்டணியில் காங்கிரஸ் 6, ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா 4, ராஷ்ட்ரீய ஜனதா தளம் 3 தொகுதிகளில் களத்தில் உள்ளன. இந்தத் தோ்தலில் மொத்தம் 64.12 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
இதனிடையே, தோ்தலை சீா்குலைக்கும் விதமாக, கும்லா மாவட்டத்தில் விஷ்ணுபூா் சட்டப்பேரவைத் தொகுதியில் ஒரு பாலத்தின் அருகே நக்ஸல் தீவிரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நிகழ்த்தினா்.
81 தொகுதிகளைக் கொண்ட ஜாா்க்கண்ட் சட்டப் பேரவைக்கு டிசம்பா் 20-ஆம் தேதி வரை 5 கட்டங்களாகத் தோ்தல் நடைபெறவுள்ளது. தோ்தலில் பதிவாகும் வாக்குகள் டிசம்பா் 23-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.
இந்த தோ்தலில், ஆளும் பாஜக தனித்து போட்டியிடுகிறது. காங்கிரஸ், ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா, ராஷ்ட்ரீய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.