பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் முயற்சியில், இரவில் பெண்களுக்கு இலவச வாகன போக்குவரத்து சேவை வழங்க லூதியானா மாவட்ட காவல்துறை முடிவு செய்துள்ளது.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. நாட்டில் பல்வேறு பகுதிகளில் நடக்கும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளன.
இந்நிலையில், பஞ்சாப் லூதியானா காவல்துறை பெண்களின் பாதுகாப்புக்கென ஒரு புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது. அதன்படி, மாலை அல்லது இரவில் ஆட்டோ, டாக்சி கிடைக்காத பெண்களுக்கு இலவச வாகன போக்குவரத்து சேவை வழங்குகிறது. ஹெல்ப்லைன் எண்களான 1091 மற்றும் 7837018555யை அழைக்கும் பட்சத்தில் காவல்துறை வாகனம் நேரடியாக நீங்கள் இருக்கும் இடத்திற்கு வந்து உங்களை அழைத்துச் செல்லும். இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இந்த இலவச சேவை வழங்கப்படுகிறது.
அதேபோன்று பெண்களுக்கு ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் அதனைத் தெரிவிக்க, 'shakti App' என்ற செயலியையும் லூதியானா மாவட்ட காவல்துறை அறிமுகம் செய்துள்ளது.