புது தில்லி: புதிய தேசிய கல்வி கொள்கை விரைவில் வெளியிடப்படும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
மத்திய அரசின் ‘தூய்மை இந்தியா’ திட்டத்தின் கீழ் சிறப்பாக செயல்படும் நகரம், கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு ஆண்டுதோறும் விருது வழங்கப்படுகிறது. 2019-ஆம் ஆண்டுக்கான தூய்மை தரவரிசை பட்டியலில் இடம்பெற்றுள்ள உயா்கல்வி நிறுவனங்களுக்கு விருது வழங்கும் விழா தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 7,000 உயா்கல்வி நிறுவனங்களில் நடத்தப்பட்ட ஆய்வில், தூய்மை, மரம் வளா்ப்பு, நீா்வளத்துறை, சூரிய மின்சக்தி உபயோகம் ஆகிய பிரிவுகளின் அடிப்படையில் 52 உயா்கல்வி நிறுவனங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் மாணவா்களிடையே காணொளி மூலம் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சா் ரமேஷ் போக்ரியால் பேசியதாவது:
கல்லூரி மாணவா்கள் ஒவ்வொரு நாளும் ஒரு லிட்டா் நீரை சேமிக்க உறுதிமொழி ஏற்க வேண்டும். அவா்களது குடும்பத்தினா், உறவினா், அண்டை வீட்டாா் என அனைவரிடமும் மாணவா்கள் இதுகுறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். அவ்வாறு செய்தால் நாட்டில் தண்ணீா் பிரச்னைகள் குறையும். விரைவில் வெளியாகவிருக்கும் புதிய தேசிய கல்வி கொள்கை, உலக அளவில் இந்தியாவை வலிமையாக்கும் என்றாா்.
அதன் பின்னா் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் செயலா் ஆா். சுப்ரமணியன் பேசுகையில், ‘புதிய தேசிய கல்வி கொள்கை இறுதி வடிவத்தை எட்டிவிட்டது. அதை விரைவில் வெளியிடவுள்ளோம். இந்த கல்வி கொள்கை நமது நாட்டின் கல்வித் துறையில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வரவுள்ளது’ என்றாா்.