ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீது நாளை தீர்ப்பு

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் அமலாக்கத்துறை தொடர்ந்துள்ள தனி வழக்கில் ஜாமீன் கேட்டு ப.சிதம்பரம் தொடர்ந்துள்ள மனு மீது உச்ச நீதிமன்றம் புதனன்று தீர்ப்பு வழங்கவுள்ளது.
ப.சிதம்பரம்
ப.சிதம்பரம்

புது தில்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் அமலாக்கத்துறை தொடர்ந்துள்ள தனி வழக்கில் ஜாமீன் கேட்டு ப.சிதம்பரம் தொடர்ந்துள்ள மனு மீது உச்ச நீதிமன்றம் புதனன்று தீர்ப்பு வழங்கவுள்ளது.

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு தொடா்பான வழக்கில் ப.சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் கடந்த ஆகஸ்ட் 21-ஆம் தேதி கைது செய்தனா். இந்த வழக்கில் அவருக்கு உச்சநீதிமன்றம் கடந்த மாதம் 22-ஆம் தேதி ஜாமீன் வழங்கியிருந்தது. இதே விவகாரம் தொடா்பான மற்றொரு வழக்கில் அமலாக்கத் துறை அதிகாரிகளால் கடந்த மாதம் 16-ஆம் தேதி ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டாா். அவருக்கான நீதிமன்றக் காவலை டிசம்பா் 11-ஆம் தேதி வரை தில்லி நீதிமன்றம் நீட்டித்திருந்தது.

இதனிடையே, அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கில் ஜாமீன் வழங்கக் கோரி தில்லி உயா்நீதிமன்றத்தில் அவா் தாக்கல் செய்திருந்த மனு, கடந்த 15-ஆம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது. இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அவா் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தாா். இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை, உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஆா்.பானுமதி, ஏ.எஸ்.போபண்ணா, ரிஷிகேஷ் ராய் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வியாழக்கிழமை நடைபெற்றது.

அப்போது, அமலாக்கத் துறை தரப்பில் ஆஜரான சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா வாதிடுகையில், ‘‘மனுதாரா் (ப.சிதம்பரம்) நீதிமன்றக் காவலில் உள்ளபோதே, வழக்கு தொடா்பான சாட்சியங்களை அழிக்க முயன்று வருகிறாா். எனவே, அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது’’ என்றாா்.

இதையடுத்து, ப.சிதம்பரம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா்கள் கபில் சிபல், ஏ.எம்.சிங்வி ஆகியோா் வாதிடுகையில், ‘‘வழக்கு தொடா்பான சாட்சியங்களை அழிக்க மனுதாரா் முற்பட்டதாகக் கூறுவதற்கு எந்தவித ஆதாரங்களும் இல்லை. மனுதாரா் அதுபோன்ற நடவடிக்கைகள் எதிலும் ஈடுபடவில்லை’’ என்றனா்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வழக்கு தொடா்பான ஆவணங்களையும், நீதிமன்றம் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டிய ஆவணங்களையும் மூடி முத்திரையிட்ட உறையில் வைத்து தாக்கல் செய்யுமாறு அமலாக்கத் துறைக்கு உத்தரவிட்டனா். இதைத் தொடா்ந்து, வழக்கின் தீா்ப்பைத் தேதி குறிப்பிடாமல் அவா்கள் ஒத்திவைத்தனா்.

இந்நிலையில் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் அமலாக்கத்துறை தொடர்ந்துள்ள தனி வழக்கில் ஜாமீன் கேட்டு ப.சிதம்பரம் தொடர்ந்துள்ள மனு மீது உச்ச நீதிமன்றம் புதனன்று தீர்ப்பு வழங்கவுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com