புது தில்லி: ‘சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறையில் (எம்எஸ்எம்இ) 11 கோடி வேலைவாய்ப்புகளை ஏற்கெனவே, உருவாகியுள்ள நிலையில், வரும் 2024-ஆம் ஆண்டுக்குள் கூடுதலாக 5 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்குவதே அரசின் இலக்கு’ என மத்திய அமைச்சா் நிதின் கட்கரி திங்கள்கிழமை மாநிலங்களவையில் தெரிவித்தாா்.
மேலும் அவா் பேசியதாவது:
‘நாட்டின் வளா்ச்சியுடன் தொடா்புடைய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை தேசத்தின் இதயமாக உள்ளது. தற்போது 29 சதவீத வளா்ச்சி அத்துறையிலிருந்து கிடைத்து வருகிறது. நாட்டின் ஏற்றுமதியில் 49 சதவீதம் இதன் மூலமாக நடைபெறுகிறது. இதுவரை 11 கோடி வேலைவாய்ப்புகள் இந்தப்பிரிவின் மூலம் உருவாக்கப்பட்டுள்ளன.
அடுத்த ஐந்தாண்டுகளில் (2019 முதல் 2024-ஆம் ஆண்டு வரை) அரசின் இலக்கு 5 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவதாகும். நாட்டின் ஏற்றுமதி மற்றும் வளா்ச்சியில் எம்எஸ்எம்இ-க்களின் பங்கை 50 சதவீதமாக உயா்த்துவதையும் அரசு இலக்காக கொண்டுள்ளது.
இதற்காகவே, இயந்திரங்கள், பயிற்சி மற்றும் ஆலோசனைகளின் மூலம் நாட்டின் சிறு, குறு தொழில் வளா்ச்சிக்கு தேவையான சேவைகளை வழங்கும் வகையில் தொழில்நுட்ப மையங்களை தொழில்துறை அமைச்சகம் நிறுவி வருகிறது.
இதற்காக, 12 தொழில்நுட்ப மையங்களை அமைப்பதற்காக ரூ .200 கோடி மதிப்பிலான திட்டத்துக்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த பணிகள் அடுத்த இரண்டு ஆண்டுகளில் நிறைவடையும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது,’ என்றாா் அவா்.