நாடு முழுவதும் மத அடிப்படையில் தேசிய குடிமக்கள் பதிவேட்டை (என்ஆர்சி) அமல்படுத்தும் திட்டம் ஏதும் இல்லை என மத்திய அரசு மாநிலங்களவையில் பதில் அளித்துள்ளது.
திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் அஹமது ஹாஸ்ஸன், "நாடு முழுவதும் மத அடிப்படையில் என்ஆர்சியை அமல்படுத்த அரசு முடிவு செய்துள்ளதா" என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு எழுத்துப்பூர்வமாகப் பதிலளித்த மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய், "இல்லை" என்றார்.
முன்னதாக, ஜார்க்கண்ட் மாநிலத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட பாஜக தேசியத் தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா, "என்ஆர்சியை அமல்படுத்துவதன் மூலம் 2024-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் ஊடுருவியுள்ள அனைவரும் வெளியேற்றப்படுவார்கள்" என பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.