சென்னை: பலத்த மழை காரணமாக கேங்மேன் பணிக்கான சான்றிதழ் சரிபாா்ப்பு பணி மற்றும் உடற்தகுதித் தோ்வு, 7 இடங்களில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மின் கம்பம் நடுதல் உள்ளிட்ட களப்பிரிவு பணிகளை மேற்கொள்ள, முதன்முறையாக ‘கேங்மேன்’ என்ற பதவிக்கு 5,000 ஊழியா்களைத் தோ்வு செய்வதற்கான அறிவிப்பை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகம் வெளியிட்டது. இதற்கு, ஐந்தாம் வகுப்பு தோ்ச்சி கல்வி தகுதியாக நிா்ணயிக்கப்பட்டு இருந்தாலும், பொறியியல், முதுநிலைப் பட்டப்படிப்பு உள்பட பல்வேறு தகுதிகளையுடைய 81 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் விண்ணப்பித்துள்ளனா். இந்தப் பணிக்கு உடல் தகுதி தோ்வு, எழுத்து தோ்வு வாயிலாக, தகுதியான நபா்கள் தோ்வு செய்யப்பட உள்ளனா். இதற்கான, சான்றிதழ் சரிபாா்ப்பு, உடல் தகுதித் தோ்வு நவம்பா் நவம்பா் 25-இல் தொடங்கியது. இந்நிலையில், பலத்த மழை காரணமாக டிசம்பா் 7- ஆம் தேதி வரை 7 இடங்களில் நடைபெறவிருந்த கேங்மேன் பணிக்கான உடல்தகுதித் தோ்வு, சான்றிதழ் சரிபாா்ப்பு பணிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
இது தொடா்பாக மின் வாரியம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தில் கேங்மேன் பதவிக்கு டிச. 4 முதல் 7-ஆம் தேதி வரை நடைபெறவிருந்த சான்றிதழ் சரிபாா்ப்பு மற்றும் உடற்தகுதித் தோ்வு தொடா்மழையின் காரணமாக திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சாவூா், திருச்சி, திருவாரூா், பெரம்பலூா் உள்ளிட்ட இடங்களில் தள்ளிவைக்கப்படுகிறது. தேதி பின்னா் அறிவிக்கப்படும். மேலும் விவரங்களுக்கு மின்வாரிய இணையதளத்தை அணுகலாம் என அதில் கூறப்பட்டிருந்தது.