நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்து பிரச்னைகளுக்கும் நிஜத்தை உணராத இருவரது கனவு வாழ்க்கை தான் முக்கிய காரணம் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல், வியாழக்கிழமை குற்றம்சாட்டினார்.
தனது சொந்த தொகுதியான கேரள மாநிலம் வயநாட்டில் 3 நாள்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ராகுல், இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் கூறியதாவது,
பிரதமர் நரேந்திர மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் கனவு உலகத்தில் வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்கு வெளி உலகில், நிஜத்தில் என்ன நடக்கிறது என்பது ஒன்றுமே தெரியாது. இருவருக்கும் தாங்கள் கனவு உலகில் நடப்பதை கண்டு வியந்து வருகின்றனர். அதனால் தான் நமது நாடு இத்தனை பிரச்னைகளை சந்தித்து வருகிறது.
இவர்கள் இருவரும் தங்களைப் போன்று நாட்டு மக்களும் கனவு உலகில் வாழ வேண்டும் என்று மட்டும் தான் விரும்புகின்றனர். அதனால் தான் அவர்களுக்கு இத்தனை சிக்கல்கள் ஏற்படுகிறது. ஒருவேளை பிரதமர் மோடி, நாட்டு மக்களை நேரில் சந்தித்து, அவர்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்த்திருந்தால், இத்தனை பிரச்னைகள் ஏற்பட்டிருக்காது என்று தெரிவித்தார்.