மத்திய உள்துறை அமைச்சகத்தின் புதிய பாதுகாப்பு ஆலோசகராக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி விஜயகுமார் வெள்ளிக்கிழமை நியமிக்கப்பட்டார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஒப்புதலுக்கு பின் இதற்கான அரசாணை வெளியிடப்பட்டது. அதில்,
முன்னாள் ஐபிஎஸ் (ஓய்வு) மூத்த அதிகாரியான கே.விஜயகுமார், ஜம்மு-காஷ்மீர் மற்றும் இடதுசாரி பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கான மத்திய உள்துறை அமைச்சகத்தின் மூத்த பாதுகாப்பு ஆலோசகராக, அடுத்த ஒரு வருட காலத்துக்கு நியமிக்கப்பட்டுள்ளார். ஜம்மு-காஷ்மீர் மற்றும் இடதுசாரி பயங்கரவாதம் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் பாதுகாப்பு தொடர்பான ஆலோசனைகளை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு வழங்குவது விஜயகுமாரின் முக்கியப் பணியாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
1975-ஆம் ஆண்டின் ஐபிஎஸ் பிரிவு அதிகாரியான விஜயகுமார், கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் ஜம்மு-காஷ்மீரின் அப்போதைய ஆளுநர் சத்தியபால் மாலிக்கின் 5 பாதுகாப்பு ஆலோசகர்களில் ஒருவராக செயல்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.