புணே: புணே மாவட்டத்தில் தற்கொலைக்கு முயன்று கவலைக்கிடமான நிலையில் ஐ.சி.யு.வில் சிகிச்சை பெற்று வந்த பெண்ணை, அவரது காதலர் திருமணம் செய்த நிலையில், அவர் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காதலித்து, திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி குடும்பம் நடத்திவிட்டு, திருமணம் செய்ய மறுப்பதாக தப்பியோடிய இளைஞர் சூரஜ் நலவடே மீது பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் ஜாதியை காரணம் காட்டி அவரை திருமணம் செய்ய முடியாது என்று இளைஞர் கூறிவிட்டதால், மனம் உடைந்த பெண், விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
அவரை மீட்ட உறவினர்கள், மருத்துவமனையில் அனுமதித்தனர். அவசர சிகிச்சை பிரிவில் அப்பெண்ணுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சம்பவம் பற்றி அறிந்த நண்பர்கள், சூரஜ் நலவாடேவை அங்கே அழைத்து வந்து உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில், மாலை மாற்றி திருமணம் செய்ய வைத்தனர்.
ஆனால், திருமணம் நடந்து 3 நாட்களுக்குப் பிறகு மீண்டும் சூரஜ் மாயமாக, அவர் மீது பாதிக்கப்பட்ட பெண் காவல்நிலையத்தில் புகார் கொடுக்க விசாரணை நடைபெற்று வருகிறது.